Saturday, November 28, 2009

abdul kalam mamanidhar

பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!
November 27, 2009 | 413 views
3 Comments

நல்லவர்களை, நேர்மையாளர்ளை மதிக்கும் பண்பு எப்போது வரும் இந்த மக்களுக்கு!
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் நான் படித்த செய்திக்கட்டுரை இது.  சூடான விவாதத்துக்கு ஒத்துவருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தேசத்தின் தலைமகனாக இருந்த ஒருவர் எந்த அளவு, தன் சொந்த நலனை, சுற்றத்தார் நலனை பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அவர் பெயர் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான்…  டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம்.
இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். குடியரசுத் தலைவராக மட்டுமல்ல… பல பெருமைகளைத் தேடித் தந்ததில் தேசத்தின் தலைமகன் அவர்.
ஆனால் அவர் பிறந்த ஊரும், வசித்த தெருவும் சாக்கடை தேங்கி, பன்றிகள், கழுதைகள் உலவும் இடமாக மாறிப் போய் கிடக்கிறது.
அந்தக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“அவரது வீட்டையும், அந்த மாபெரும் மனிதர் வாழ்ந்த தெருக்களையும் பார்த்தால்தான் நமது பெருமை நமக்கு புரிவது எப்போது என்ற பெரும் ஏக்கம் வந்து தொலைக்கிறது. சாலையெங்கும் தேங்கி நிற்கும் மழை நீர்.
அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளையும், பன்றிகளையும் கடந்துதான் டூரிஸ்ட்டுகள் அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் (அந்த நீல வண்ண வீடுதான் கலாமுடையது. தற்போது அங்கே வசிப்பது அவரது அண்ணன். வீட்டின் பக்க சுவருக்கு கூட சிமெண்ட் பூசவில்லை பாருங்கள்).
பக்கத்திலேயே குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பெரியவர், தனது எட்டுக்கு எட்டு அளவு கொண்ட கடையில் தானும் கலாமும் இருப்பது போன்ற புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். விசாரித்தால் இவர்தான் கலாமை தூக்கி வளர்த்த அவரது தாய் மாமா என்றார்கள். தனது பத்தாவது தலைமுறை பேரனுக்கும் கோடிகளை சேர்த்து வைக்கிற அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னை தூக்கி வளர்த்த தாய் மாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லை கலாம். அந்த போட்டோ கூட அவரே பணம் கொடுத்து பிரேம் போட்டதுதானாம்… (நன்றி: அந்தணன், தமிழ்சினிமா)”
-இதை தட்டச்சும்போதே விழிகளை நீர் மறைக்கிறது. கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் மனதில் வந்து போகிறார்.
அதிகாரிகளைக் கூப்பிட்டு, அந்தப் பகுதியை கொஞ்சம் மேம்படுத்தச் சொல்லியிருக்கலாம் அவர். ஆனால் அரசு எந்திரம் எதையும் முறையாகச் செய்யட்டும் என்ற நேர்மையான பார்வை. எல்லா மக்களுக்கும் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதுவே எனக்கும் இருக்கட்டுமே என்ற தார்மீகம் அவரது மௌனத்தில் புதைந்திருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.
தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.
அதே நேரம் இந்த எளிமையும் நேர்மையும் கூட, இந்த நாட்டை, அதன் கேடுகெட்ட நிர்வாகத்தை, ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும் நெஞ்சுக்குள் நெருப்புப் பந்தாய் பொங்குகிறது!
திருந்தவே திருந்தாதா இந்த தேசம்? நல்லர்வர்களை, நேர்மையாளர்களை மதிக்கும் அறிவு என்றைக்கு இந்த தேசத்து மக்களுக்கு வரப்போகிறது? உயிரோடு இருக்கும்போதே, ஒரு நல்ல மனிதரை மதிக்கும் பண்பை எப்போதுதான் நாம் கற்கப்போகிறோம்?

No comments:

Post a Comment